மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்னும் அடிப்படையில் கைப்பற்றியது. முதலாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 272 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
இரண்டு போட்டிகளும் மூன்றே நாட்களில் முடிவுக்கு வந்தன. இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. அறிமுக வீரர் ப்ரித்வி ஷா இரண்டு போட்டிகளிலும் பிரகாசித்திருக்கிறார். தொடர்ந்தும் அவரது திறமையை வெளிப்படுத்தினால் 2019ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண இந்திய அணியில் இடம்பெறலாம்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பந்துவீச்சாளர் ஷார்துல் தாக்கூர் இரண்டு ஓவர்கள் மட்டுமே பந்துவீசிய நிலையில் உடல் உபாதை காரணமாக அரங்கம் திரும்பினார். முறையான ஓய்வை எடுத்து தனது திறமையை வெளிப்படுத்தாவிட்டால் இந்திய அணியில் இருந்து ஒதுக்கப்பட வாய்ப்புண்டு.
மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது டெஸ்ட் போட்டி துடுப்பாட்டத் திறனை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். இருபது-20 போட்டிகளைப் போலவே டெஸ்ட் போட்டிகளிலும் அடித்தாட முயல்வது தவறான அணுகுமுறை. பொறுமையான துடுப்பாட்டத்தை கற்றுக்கொள்ள வேண்டும். முழுமையான டெஸ்ட் அணியை கட்டமைக்க வேண்டும்.
இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தம் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய உமேஷ் யாதவ் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். அறிமுக வீரர் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய இளம் சிங்கம் ப்ரித்வி ஷா தொடர் நாயகன் விருதைக் கைப்பற்றினார். இவர் முதல் போட்டியின் ஆட்ட நாயகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
21ஆம் திகதி முதல் ஒரு நாள் போட்டித்தொடர் இடம்பெறவுள்ளது. ஐந்து போட்டிகள் இடம்பெறவுள்ளன. தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட இருபது-20 தொடரும் இடம்பெறவுள்ளது.

0 Comments